கேள்வி பதில்கள் - 6

நைட்டோபோபியா பற்றி சொல்லுங்களேன் ?
அகமது ரஜீனா, காட்டு தைக்கா தெரு, காயல்பட்டணம்,

நைட்டோ போபியா என்பது வஞ்சனையில்லாமல் இருட்டை பார்த்து பயப்படுவது. பொதுவாக நாம் எல்லோருமே இரவை பார்த்து பயப்படுவது உண்டு. அதற்கான பொதுவான காரணம் இருட்டில் நமக்கு எதுவும் புலப்படாது என்பதுதான்.


இந்த போபியாவை பொறுத்தமட்டில் இந்த போபியாகாரர்கள் வெட்கப்பட வேண்டியது என்று ஒன்றும் கிடையாது. கிராமங்களில் இருப்பவர்களை விட நகரங்களில் வாழ்பவர்களுக்கு இந்த போபியா அதிகம் இல்லை. காரணம் - பகல் போல் வெளிச்சத்தில் நகரங்கள் அதிகமாக இருப்பதுதான்.

பொதுவாக 2 வயது குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு அதிகம். நாம் வேறு அவர்களை பயமுறுத்தும் பொழுது இருட்டை கண்டால் பயப்படனும் என்பது போல் சொல்லி வைக்கிறோம். இதுவும் தப்பு. குழந்தையுண்டான பெண்களுக்கு இந்த போபியா அதிகம் இருந்தால் அது குழந்தைக்கும் சிறிது பாதிப்பு வர வாய்ப்புண்டு. அது சரி.... AEROPHOBIA என்ன தெரியுமா? கரெக்ட்... அதுதான். விமான பயணம் பற்றிய பயம்.




“இமயமலையின் பயன்தான் என்ன?”
(நிஜாமுதீன், CMP லேன், அதிராம்பட்டிணம்)


மலையின் பயன்கள் காலத்தால் மாறுபடுகிறது. அன்னியர்கள் இமயமலையை தாண்டி நம் நாட்டின் மீது படையெடுக்கமுடியாது என்று பள்ளிக் கூட பாடத்தில் படித்தது ஞாபகம். ஆனால் நவீன ஆயுதங்கள் விமானங்கள் எல்லாம் வந்த பிறகு அந்த காரணம் காணாமல் போய்விட்டது.

மலை என்பது பூமி தட்டு நகரும் பொழுது, இடநெருக்கடி ஏற்பட்டு அதனால் பூமிபந்தின் மேல் முளைத்த நிலபரப்பே மலையாகியது என்பது அறிவியல் கோட்பாடு. அது மட்டுமின்றி இமயமலையின் உயரமும் கூடிக்கொண்டே போவதை அளந்து காட்டிவிருக்கிறார்கள். இமயமலையின் பயன் என்று சொல்ல வேண்டுமென்றால் அதன்மேல் படிந்திருக்கும் பனிக்கட்டிகள் வெயில் காலத்தில் உருகி இந்தியாவில் வற்றாத ஜீவநதியாகிய கங்கைக்கு உதவுகிறது. இது போல இன்னும் பல நதிகளின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது.

கொசுறு தகவல் : மலைகள் நிரம்பிய பகுதிகளில் பூகம்பம் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.


பிரசர் குக்கரில் சமைத்து சாப்பிடுவதால் உடம்புக்கு ஏதும் தீமையா?
அபு முஜாஜித் - அலியார் தெரு - காயல்பட்டணம்


பிரஷர் குக்கரில் உஷ்ணமும், விரயமாகாமல் இருப்பதால் சமையல் உடனே முடிந்து விடுகிறது. மற்றபடி அதனால் எந்த கெடுதியும் விளைவதாக நிரூபிக்கப்படவில்லை. பிரஷர் குக்கர்கள் வருவதற்கு முன் “ருக்குமணி குக்கர்” என்று ஓன்று இருந்ததாம். அதற்கும் இதே முறைதான் பயன்படுத்தப்பட்டது.



விண்வெளி வீரர்கள் இயற்கை உபாதைகளுக்கு என்ன செய்வார்கள்?
(ஹாஜா தவ்பீக், சின்ன நெசவு தெரு, காயல்பட்டணம்)




விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லை என்பதால் எல்லாமே தலைகீழ்தான். தூங்க வேண்டும் என்றால் ஒரு படுக்கையோடு தங்களை பெல்ட் வைத்து கட்டிக் கொள்வார்கள் கை கழுவ வேண்டும் என்றாலும் துணி வைத்து துடைத்து தான் கழுவ (?!) வேண்டும். நீங்கள் கேட்ட நம்பர் 2 விஷயம், பிளைட்டில் உள்ளதுபோல் தான் இருக்கும் , தண்ணீர் உபயோகிக்க முடியாது. எல்லாம் “வேக்கும் மெதட்” தான். உறிஞ்சிக் கொள்ளும் சிறுநீர் கழிப்பார்கள், உறிஞ்சிக் கொள்ளும்.

நாம் தின்பதுபோல் இட்லி, தோசை, பர்க்கர், பிரட் என்று திங்கமாட்டார்கள். அவர்களின் உணவுகள் மாத்திரை வடிவில் இருக்கும். பசியை மறக்க செய்யும் வஸ்து அது. அதே நேரம் மனிதனுக்கு தேவையான அடிப்படை சக்திகளும் அந்த மாத்திரை வடிவ உணவில் உண்டு. ஒரு வேளை உணவாக அவர்கள் அருந்தும் அந்த மாத்திரையின் விலை சில ஆயிரங்களில் வரும். பயிற்சிகள் பெற்றபின் இதெல்லாம் சாத்தியமாகிறது.



கலப்பு மணம் செய்து கொள்கிறார்களோ, இதைப் பற்றி கருத்து ....?
குலசை நஜ்முதீன், சிவன் கோயில் தெரு, காயல்பட்டணம்)


“ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் தான் அது கலப்பு பணம். ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்து கொள்வது கலப்பு மணம் என்று ஒன்று கிடையவே கிடையாது”.
இதே கேள்வியை பெரியாரிடம் கேட்ட போது சொன்ன பதில் தான் மேலே உள்ளது.


சாதிகள் என்ற அமைப்பே இல்லாத போது கலப்பு மனம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந்த கேள்விக்கு பதில் சொல்லி சாதி என்ற பிரிவுகள் உள்ளதாக மறைமுகமாக கூட ஏற்றுக் கொள்ள முடியாது.


சுமார் இருநூறு கோடி பேரில் ஒருவருக்குதான் 120 வயதுக்கு மேல் வாழும் வாய்ப்பு இருக்கிறது. என்கிறார்களே அது உண்மையா?
ஹாஜா தவ்பீக், சின்ன நெசவு தெரு, காயல் பட்டணம்.


இந்த விகிதாசாரங்கள் எல்லாம் மொத்த மக்கள் தொகையில் இருந்து பார்த்து கழித்து ஒரு முடிவுக்கு வருவது. பொதுவாக உலக மக்கள் தொகை 700 கோடி என்றால், 110 வயதுக்கு மேல் 3 பேர்கள் இருக்கலாம், அப்பொழுது, விகிதாச்சாரம் 3/1=233 கோடி. ஆக 233 கோடி பேருக்கு ஒருத்தர் 110 வயதுக்கு மேல். இந்த மாதிரியான தகவல்கள் எல்லாம் நம்மை சற்று சுவராசியப்படுத்துவதற்காக வெளிவருகிறது.

உமர் (ரலி) அவர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதாக படித்தேன். அது எந்த காரணத்திற்காக என்று சொல்ல முடியுமா?
(மீரா முபீதா, L.F. ரோடு, காயல்பட்டணம்)


அது உலக சாதனை புத்தகம் இல்லை. மைக்கேல் H. ஹார்ட் என்பவர். உலகில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியவர் என்ற வகையில் சரித்திரத்தில் இடம் பெற்றவர்களிலிருந்து தேர்ந்தெடுத்து THE 100 என்று ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்த புத்தகத்தில் முகமது நபி (ஸல்) முதலிடத்திலும், சர் ஐசக் நியூட்டன் இரண்டாமிடத்திலும், இயேசு நாதரை மூன்றாம் இடத்திலும் இடம் பெற செய்தார். அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்ட இஸ்லாமியர்களின் இரண்டாம் கலீபா (மத தலைவர்) என்றழைக்கப்படும் உமர் (ரலி) அவர்கள் 52 இடத்தில் இடம் பெற்றுள்ளார்.



நமது நாட்டில் பாலியல் கொடுமை அதிகரித்து வருகிறதே... இதற்கெல்லாம் மூலக்காரணம்?
- குலசை நதீன், சிவன் கோயில் தெரு, காயல்பட்டிணம்.


பாலியல் கல்வி அவசியம் என்பதன் அவசியத்தை கண்டிப்பாக கற்றுக் கொடுக்க வேண்டும். இருபது வருடங்களுக்கு முன் வாழ்ந்த சூழல் வேறு, தற்போதைய கால சூழல் வேறு. இன்றைய சூழலுக்கு பாலியல் கல்வி மிக அவசியம். எந்தெந்த வயதினருக்கு எந்தெந்த வகையிலான பாலியல் குறித்த கல்வியை அளிப்பது என்பதுபற்றி நிபுணர்கள் முடிவு செய்யலாம். கல்யாணம் முடிந்த பல பேர்களுக்கு பாலியல் குறித்த சந்தேகங்கள் அதிகம், யாரிடம் கேட்பது என்ற கூச்சமும், தயக்கமும் அவர்களை கடைசி வரையிலும் சந்தேகங்களோடு வாழவைக்கிறது.

ஊடகங்களின் அபரிதமான வளர்ச்சியும், அடிப்படை கலாச்சார மாற்றங்களும் பாலியல் குறித்த பார்வையை மாற்றியிருக்கிறது. அப்படி பாலியல் கல்வி தேவையில்லை என்பவர்களுக்கு ஒரு கேள்வி... 1980களில் உங்களை சுற்றியிருந்த பாலியல் குறித்த சூழ்நிலைகளை நன்கு யோசித்துபாருங்கள். தற்போதைய சூழலை சிந்தித்து பாருங்கள்...? கண்களாலேயே காமப்பார்வை பேசிய காலத்தையும், நமீதாவின் “திறந்த” உள்ளத்தையும் யோசியுங்கள். ஒன்று 1980களின் சூழலை கொண்டு வாருங்கள்.இல்லையெனில் பாலியல் கல்வியை முறைப்படுத்தி கற்க வாருங்கள்.,



மாநிலங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல், சுதந்திர இந்தியா என்று எப்படி பெருமையடிப்பது?
- செய்யது அகமது, மொகுதூம், தெரு, காயல்பட்டணம்..


நமது அண்டை மாநிலமான கர்நாடகம் தண்ணீர் பிரச்சனையில் காட்டும் தீவிரம்தான் நம்மில் பலருக்கு தெரியும். அதன் தீர்ப்புகளையும், அதில் உள்ள அரசியலையும் பற்றி சொல்லி சொல்லி அலுத்து போய்விட்டது. 1969ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் மட்டும் இப்போதைக்கு...

அண்ணா முதலமைச்சராக இருந்த போது அமெரிக்காவிற்கு அரசியல் பயணம் செய்தார். அப்படியே ஐரோப்பா சென்ற அவர் அப்போதைய போப் ஆண்டவரை பார்த்து வரலாம் என்று சென்றிருந்தார். போப்பாண்டவரை பார்க்கும் முக்கிய புள்ளிகள் அவரிடம் வரம் ஒன்று கேட்பார்கள். ‘போப்’பும் அதை செய்து கொடுப்பார். அவரால் நிறைவேற்ற முடிகின்ற காரியங்களையே பொதுவாக கேட்பார்கள். அதே போல் அண்ணாவுக்கு ஒரு வாய்ப்பு அந்த சந்திப்பின் போது கிடைத்தது. அப்பொழுது அண்ணா போப்பிடம் போப் அவர்களே, எங்களது நாட்டின் ஒருமைப்பட்ட இந்தியா உருவாக்க பாடுபட்ட “ரானடே” அவர்களை போர்ச்சுக்கீசிய அரசு கடந்த 14 வருடங்களாக சிறையில் வைத்திருக்கிறது. எங்கள் நாட்டு அரசால் அந்த நாட்டிலிருந்து அரசியல் ரீதியாக காப்பாற்றமுடியவில்லை. சுத்தமான வீரரான ‘ரானடே’ அவர்களை நீங்கள் என் நாட்டுக்கு மீட்டி தந்தால் மகிழ்வேன்” என்றாராம். தனக்காக என்று கேட்காமல், கோவாவின் முன்னேற்றத்திற்காக போராடி அதனால் போர்ச்சுக்கல் நாட்டு (1950களில் கோவா போர்ச்சுக்கீசியர் வசம் இருந்தது) சிறையில் வாடுபவரை மீட்க நினைத்த அண்ணா எந்த மாநிலத்தையும் பிரித்து பார்க்கவில்லை. அப்போதைய அரசியல் அப்படி!

விடுதலை பெற்ற அந்த கோவா மாநில சுதந்திர பேராட்ட வீரர் ரானடே போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுவிக்கப்பட்டார். இந்தியா வந்தவர் அண்ணாவை சந்தித்து நன்றி சொல்ல வந்தார். ஆனால் அண்ணா அவர் தமிழகம் வருவதற்குள் இறந்துவிட்டார்.